வழக்குகள்:
ஜெயலலிதாவின் மீதான வழக்கு விவரங்கள்:
வண்ணத் தொலைக்காட்சி வழக்கு:
ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு கையூட்டுப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இவ்வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், அதிகாரிகள் ஹெச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.
தீர்ப்பு - அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேரை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை 2000-ஆம் ஆண்டு மே 30 அன்று விடுவித்தார். அதேசமயம் அமைச்சர் செல்வகணபதிக்கும், அதிகாரிகளுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
டான்சி நில வழக்கு:
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
தீர்ப்பு - 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்குகளுக்குமாகச் சேர்த்து ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்தது.
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது 2000-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பிற்குத் தடை விதித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்யவில்லை.
இது 2001-ஆம் ஆண்டு ஒரு சட்ட சிக்கலுக்கு வித்திட்டது. 2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும் வெற்றி பெற்று, முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க முடியாது, எனவே அவர் பதவியேற்கக் கூடாது என வழக்குகள் தொடரப்பட்டன, இவ்வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு விலகினார். 2003-இல் சென்னை உயர்நீதி மன்றம் அவரை விடுவித்த பின்னர் ஆண்டிப்பட்டித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார்.
இவ்வழக்கின் காரணமாக அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகி ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானார்.
பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு:
கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு.
தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது
2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தர்மபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர்.
தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மூன்று அதிமுகவினருக்கு சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன[25], இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, ‘கல்லூரி’ என்று ஒரு திரைப்படம் உருவானது.
நிலக்கரி இறக்குமதி வழக்கு:
தமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன், மின்வாரியத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
தீர்ப்பு - சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த வழக்கில் சுப்ரமணியம் சுவாமியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். ‘700 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்திருந்த சுப்ரமணியம் சுவாமியால், விசாரணையின்போது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடவோ, விளக்கவோ முடியவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு:
அரசு -தனியார் கூட்டுறவில் உருவான நிறுவனம் ஸ்பிக். செட்டிநாட்டரசர் குடும்பத்தைச் சேர்ந்த எம்.ஏ. சிதம்பரமும், அவரது மகன் ஏ.சி. முத்தையாவும், தோற்றுவித்த அந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை (26%) தமிழக அரசு நிறுவனமான டிட்கோ வைத்திருந்தது. நிறுவனத்தின் தலைவராக எம்.ஏ.சிதம்பரமும், துணைத்தலைவராக ஏ.சி.முத்தையாவும் இருந்தார்கள். 89-ஆம் ஆண்டு ஏற்பட்ட திமுக ஆட்சியின்போது பெரும்பான்மைப் பங்குகளை தமிழக அரசு வைத்திருப்பதால் தலைமைச் செயலாளர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. :எம்.ஏ.சிதம்பரம் குடும்பத்தினர் தலைவராவதற்கு ஏதுவாக தமிழக அரசு தன்னிடமிருந்த 2 லட்சம் கடன் பத்திரங்களை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்தது. 12.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை 40.66 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டுதான் கொடுத்தது. ஆனால், இதில் ஊழல் நடந்ததாக சுப்ரமணியன் சுவாமி கூறி வந்த குற்றச்சாட்டுக்களையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
தீர்ப்பு - 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் நாள் சிறப்பு நீதிமன்றம் சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை எனச் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. அரசுக்கோ, டிட்கோவிற்கோ நிதி இழப்பு ஏற்படவில்லை என்றும் சொல்லியது.
செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் பொது நல வழக்குத் தொடர்ந்ததாகவும், இந்தப் பங்கு பரிமாற்றம் பற்றித் தனக்குத் தனிப்படத் தெரியாது என்றும் அதுவும் கட்டுரை வெளிவந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் வழக்குத் தொடர்ந்திருப்பதாலும் பொது நல வழக்குத் தொடர்ந்த சுப்ரமணிய சுவாமியின் சாட்சியத்தை ஏற்க இயலாது என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
பிறந்த நாள் பரிசு வழக்கு:
1992-ஆம் ஆண்டு 57 பேரிடமிருந்து 89 வரைவோலைகள் (இதில் அயல்நாட்டிலிருந்து 3 லட்சம் டாலருக்கான ஒரு வரைவோலையும் அடக்கம்) மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் தனது பிறந்த நாளன்று பரிசாகப் பெற்றதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்பு குற்றச்சாட்டுப் பதிவு செய்தபோது 21 பேரிடமிருந்து 1.48 கோடி ரூபாய் என்று அதைக் குறைத்துவிட்டது. இந்த வழக்கில் அன்றைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
தீர்ப்பு - 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த மொத்தக் குற்றசாட்டுக்களையும் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார். பத்தாண்டுகளாகியும் சி.பி.ஐ. விசாரணையை முடிக்காமல் காரணமின்றி இழுத்தடிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட எவரும் புகார் அளித்து, சி.பி.ஐ. இந்த வழக்கைத் தொடரவில்லை என்றும், ஜெயலலிதா அவரது வருமான வரி தாக்கலின் போது பிறந்தநாள் பரிசுகள் குறித்துக் கொடுத்திருந்த தகவலை அடிப்படையாகக்கொண்டே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே அவர் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கு:
ஜெயலலிதா தமிழக முதல்வராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதியை மாநில ஆளுனரிடமிருந்து சுப்பிரமணியன் சுவாமி பெற்றார்.
2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது.
இவ்வழக்கில் 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன.
2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தியதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு கர்நாடக மாநிலத்தின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.
இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், செயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
மே 11 ,2015 அன்று சொத்துக்குவிப்பு வழக்கின் வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக இவரால் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.
ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசின் மேல்முறையீட்டை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
வருமானவரிக் கணக்கு வழக்கு:
வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வருமானவரி வழக்கு சென்னை கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்நிலையில் ரூபாய் இரண்டு கோடி வருமானவரித் துறைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா அபராதம் செலுத்தியதால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அன்று வருமானவரித் துறையினர் வழக்கை திரும்ப பெற்றதின் மூலம் வருமானவரிக் கணக்கு வழக்கு முடிவுக்கு வந்தது. அனைத்து வழக்குகளிலிருந்தும் இவர் விடுவிக்கப்பட்டமையால் 2015 மே மாதம் 23 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சராகப் ஐந்தாவது முறையாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.